அக்னி வீரர்களாக சேர வந்து குவிந்த விண்ணப்பங்கள்... அடுத்து என்ன??

வெள்ளி, 8 ஜூலை 2022 (08:46 IST)
அக்னிபத் திட்டத்தின் அம்சங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற ஆலோசனை குழுவிடம் விளக்க இருக்கிறார். 

 
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகால தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் பலர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. எனினும் இந்த திட்டத்தில் சேர்வதற்கான அறிவிப்புகளை இந்திய ராணுவம் வெளியிட்டது.
 
அதன்படி அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24 ஆம் தேதி முதல் பெறப்பட்டன. விமானப்படையில் சேர்வதற்கு முதல் நாளில் மட்டும் 3,800 பேர் விண்ணப்பித்திருந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது மொத்தமாக இந்த திட்டத்தில் பணியில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 
முந்தைய காலத்தில் 6.31 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில் அக்னிபத் திட்டத்தில் அதிக அளவிலான இளைஞர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற ஆலோசனை குழுவிடம் விளக்கம் அளிக்கவுள்ளார். 11 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்