ஜம்மு காஷ்மீரில் பிரதமர் சூறாவளி பிரச்சாரம்.! விவசாயிகளுக்கான நிதி உதவி தொகை ரூ.10,000-ஆக உயர்த்தப்படும் என உறுதி.!!!

Senthil Velan

சனி, 14 செப்டம்பர் 2024 (15:21 IST)
ஜம்மு காஷ்மீரில் பாஜக வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கான நிதி உதவி ரூ. 6,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.  
 
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தோடா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,  ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகள், உங்களை தவறாக வழிநடத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன என்றும் ஜம்மு காஷ்மீரில் இம்முறை நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்ப ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். 

பாஜக ஆட்சி அமைந்தால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். பயங்கரவாதம் இல்லாத, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருக்கும் அத்தகைய ஜம்மு காஷ்மீரை பாஜக உருவாக்கப் போகிறது என்றும் சுற்றுலாவை மேலும் விரிவுபடுத்தவும், நீங்கள் பயணிக்க எளிதாகவும் இருக்கும் வகையில் மத்திய பாஜக அரசும் இங்கு போக்குவரத்து இணைப்பை பலப்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மிக விரைவில், டில்லியில் இருந்து ரம்பன் வழியாக ஸ்ரீநகர் செல்லும் ரயில் பாதை பணி நிறைவடையும் என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு குடும்பமும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைக்கான காப்பீடு வசதியை கொண்டுள்ளதாகவும், ரூ. 7 லட்சமாக உயர்த்த பாஜக வாக்குறுதி அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். குடும்பத்தின் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.18,000 டெபாசிட் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


ALSO READ: அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டதும், மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை..! பிரேமலதா...!
 
ஜம்மு காஷ்மீர் விவசாயிகள், பிரதமர் சம்மன் நிதியின் கீழ் பெரும்  6,000 ரூபாய்  உதவி தொகையை பாஜக வெற்றி பெற்றால்  ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்