மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஓடிடி தளங்கள்! – இனி சென்சார் செய்யப்படுமா?

புதன், 11 நவம்பர் 2020 (12:18 IST)
ஆன்லைன் ஓடிடி தளங்கள், சீரியல்கள், யூட்யூப் தளங்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக திரையரங்குகளில் படங்கள் பார்க்கும் பழக்கம் போய் ஓடிடி தளங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. கொரோனா காரணமாக சமீப சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதேசமயம் ஓடிடி தளங்கள், ஆன்லைன் தளங்களில் வெளியாகும் இணைய தொடர்கள், திரைப்படங்களுக்கு சென்சார் கிடையாது என்பதால் ஆபாச காட்சிகள், அவதூறு காட்சிகள், கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெறுவதாக பலர் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக வெளியாக கூடிய அனைத்து தகவல்கள், படங்கள், சீரியல்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது அரசு.

இதன் மூலம் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள், அவற்றில் வெளியாகும் படங்கள், சீரியல்கள், யூட்யூபில் ஆடியோ, வீடியோ வெளியிடும் யுட்யூப் சேனல்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகிய அனைத்தும் தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இனி இணைய தொடர்கள் சென்சார் செய்யப்படவோ, அதன் கருத்துருவாக்கம் தவறாக இருக்கும்பட்சத்தில் நீக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்