ரூ. 500, 1000 நோட்டு ஒழிப்பை பாராட்டும் 90 % இந்தியர்கள் முட்டாள்கள் - கட்ஜூ அதிரடி

வியாழன், 10 நவம்பர் 2016 (16:11 IST)
500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பை பலரும் பாராட்டுவதன் மூலம் 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் ஏற்கனவே கூறியது உண்மையாகியுள்ளது என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.


 

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 08-11-16] இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதிலும் இருந்து சம அளவில் எதிர்ப்பும், வரவேற்பும் இருந்து வருகின்றன.

இந்நிலையில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது முகநூல் பதிவில், ”500, 1000 ரூபாய்கள் ஒழிக்கும் திட்டமானது, மத்திய அரசின் நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டைதான் காட்டுகிறது. மேலும், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எல்லாவற்றையும் விட இன்றைய நாளில் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாதவர்கள் யார்?. மேலும் பணவீக்கம் அதிகம் உள்ள இந்த நாளில் இந்த பணத்துக்கு என்ன மதிப்பு இருக்கப்போகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஒரு பதிவில், ”பெரும்பாலான மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பதை பாராட்டுவதன் மூலம் 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் ஏற்கனவே கூறியது உண்மையாகியுள்ளது.

இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பால் உண்மையிலேயே கருப்புப் பணத்தை ஒழித்து விட முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா… இது பெரும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். அது ஏற்கனவே ஆரம்பமாகியும் விட்டது” என்றும் கட்ஜு கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்