பாதுகாப்பு அதிகாரியை செருப்பு மாட்ட வைத்த மந்திரி

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:04 IST)
சுதந்திர தினவிழாவில் பங்கு கொண்ட ஒடிசா மாநில மந்திரிக்கு, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செருப்பை மாட்டிவிட்ட சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஒடிசா மாநில சிறு, குறுந்தொழில் துறை மந்திரியாக இருப்பவர் ஜோகேந்திர பெஹெரா ஆவார். இவர் அம்மாநிலம் தலைநகரான கெயோஞ்சர் என்ற இடத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
 
அவர் கொடியை ஏற்றிய பின், அவருக்கு அருகில் நின்றிருந்த அவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், மந்திரியின் செருப்பை குனிந்து சரி செய்து கொண்டிருந்தார்.
 
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊடகங்கள், அதை பல கோணங்களில் படம் எடுத்தன. அதை உள்ளூர் தொலைக்காட்சிகள் வீடியோவாக வெளியிட்டன.  அதனால், மந்திரியின் செயல் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
 
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த ஜோகேந்திர பெஹரா “ நான் ஒரு விஐபி. எனவே அவர் செய்தது ஒன்றும் தவறல்ல. கொடியை நான்தான் ஏற்றினேன். அவரில்லை”என்று திமிராக பதிலளித்துள்ளார்.
 
அவர் மீது ஒடிசா மாநில முதல் அமைச்சர் நவின் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்