ரசகுல்லாவுக்கு சண்டைபோடும் ஒடிசா, மேற்கு வங்காளம்

வியாழன், 28 ஜூலை 2016 (04:52 IST)
ரசகுல்லாவின் தாயகம் தங்கள் மாநிலம்தான் என்று ஒடிசாவும், மேற்கு வங்காளமும் காப்புரிமை போட்டி நடத்தி வருகின்றனர்.


 

 
1999-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் புவிசார் குறியீட்டுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அவற்றின் தனித்தன்மைக்காக இத்தகைய புவிசார் குறியீடு அளிக்கப்படும். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. 
 
இந்த குறியீடு பெற்ற ஒரு பொருளை மற்ற எந்த ஒரு நிறுவனமுமோ அல்லது வேறு பகுதியினரோ தயாரிக்க முடியாது. இதுவரை 193 பொருள்கள் இவ்விதம் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
 
ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication -GI) கோரி ஒடிசா மாநில அரசு விண்ணப்பித்துள்ளது. ஆனால், ஒடிசாவின் கோரிக்கையை ஏற்க கூடாது ரசகுல்லா எங்களுக்குதான் சொந்தம் என்று மேற்கு வங்காளம் மாநிலமும் காப்புரிமை கோரியுள்ளது.
 
ஒடிசா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரத்துக்கும் கட்டாக் நகருக்கும் இடையே உள்ள பஹாலா எனும் கிராமத்தில்தான் தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்டது என்று ஒடிசா வாதாடுகிறது,
 
பூரி ஜெகன்னாதர் கோவிலின் தேர் திருவிழா முடிவில் கடவுளுக்கு நைவேத்ய பண்டம் ரசகுல்லாதான். இந்த ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாகவும் ஒடிசா அரசு கூறுகிறது.
 
ஒடிசா கதை இப்படியிருக்க, ரசகுல்லா என்றால் அது பெங்காளி ஸ்வீட்தான் என்று எடுத்த எடுப்பிலேயே உரிமை கொண்டாடுகின்றனர் கொல்கத்தாவாசிகள். இங்கு தயாராகும் ரசகுல்லா வெள்ளை நிறத்தில் இருக்கும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்