சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறலாம். ஜனாதிபதி காட்டம்

வெள்ளி, 3 மார்ச் 2017 (05:37 IST)
சமீபத்தில்  டெல்லியில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ராம்ஜாஸ் கல்லூரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நேற்று கேரளாவில் விழா ஒன்றில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.




அப்போது சகிப்புத்தன்மையற்ற நபர்களுக்கு இந்தியாவில் இருந்து தாராளமாக வெளியேறி கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு இங்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் கூறினார்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. முன்னதாக அவர் கேரளாவில் உள்ள கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

'பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது கண்டித்தக்கது. மதச்சார்புள்ளவர்கள் கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும். சகிப்புத்தன்மை அற்றவர்களுக்கு ஒருபோதும் இந்தியாவில் இடமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கலாசார மையங்களாக திகழ வேண்டிய கல்வி நிறுவனங்கள் வன்முறைக் கூடங்களாக மாறுவது வேதனை அளிக்கிறது'

‘’இந்திய அரசியலமைப்பு பற்றியும், இந்திய கலாசாரம், பண்பாடு பற்றியும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனை மதித்து நடக்க வேண்டும். சட்டத்தின் மாண்பை மீறுவது ஏற்புடையதல்ல. சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. பிரிவினைவாதம் ஒருபோதும் இந்தியர்களுக்குள் இருக்கக்கூடாது; இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுதான் நம்மை மேன்மேலும் வலுப்படுத்தும்,’’

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்