கேரளா தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் ஜெயலலிதாவிடம் நேரில் ஆசி

ஞாயிறு, 8 நவம்பர் 2015 (20:11 IST)
கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் தமிழக முதலவர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
 

 
கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
 
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக வின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான, இடுக்கி மாவட்டம் பீர்மேடு பஞ்சாயத்து 1-வது வார்டு எஸ். பிரவீணா, தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டு பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 3-வது வார்டு பாலகிருஷ்ணன்,  பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டு ஹெலன் அமலோற்பவமேரி, கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 7-வது வார்டு ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டு சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
 
இந்த நிலையில், வெற்றி பெற்ற இவர்கள் அனைவரும், முதலமைச்சர் ஜெயலலிதாவை கோவையில் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலுக்கான, கழக தேர்தல் பணி பொறுப்பாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சிறைச் சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்