தாடியை எடுக்க மறுத்த சல்மான் கான் மீது வெந்நீர் ஊற்றிய நக்மா

சனி, 3 ஜூன் 2017 (19:14 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் தாடியை எடுக்க மறுத்த கணவர் மீது மனைவி வெந்நீர் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் கான்(32) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி நக்மா(25) திருமணம் ஆன நாளிலிருந்து தனது கணவரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் போல ஸ்டைலாக இருக்க கூறியுள்ளார். ஜீன்ஸ், டிசர்ட் போன்ற உடைகள் அணியும்படி கூறியுள்ளார். 
 
ஆனால் மத நம்பிக்கை அதிகம் கொண்ட சல்மான் கான் வழக்கம் போல் பைஜாமா, ஜிப்பா மட்டுமே அணிந்து வந்துள்ளார். நக்மா கணவரிடம் அவர் வைத்திருந்த நீண்ட தாடியையும் எடுக்க கூறியுள்ளார். ஆனால் சல்மான் மறுத்துள்ளார். தினமும் சொல்லி சொல்லி ஆத்திரமடைந்த நக்மா நேற்றும் தாடியை எடுக்குமாறு கூறியுள்ளார்.
 
இதனால் கணவன் - மனைவி இருவருடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த நக்மா அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து சல்மான் முகத்தில் வீசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சல்மான் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் சல்மானை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
மருத்துவமனையில் சல்மான் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் நக்மா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்