மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி., சந்தீபன்ராவ் பும்ரே. இவர் தொடர்ச்சியாக ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டு, தற்போது எம்.பி.யாக பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில், இவரிடம் டிரைவராக வேலை பார்த்து வரும் ஜாவேத் ரசூல் ஷேக் என்பவருக்கு, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது, ஜாவேத் ரசூல் ஷேக், தனக்கு சொந்தமான நிலம் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மேலும், "சலார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவுகள் உள்ளன. எனவே, அவர்கள்தான் எனக்கு இந்த நிலத்தை பரிசாக அளித்தனர்," என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஜங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இவருக்கு பரிசாக வழங்க வேண்டும் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்களை தானமாக வழங்குவது என்பது ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு மட்டுமே பெரும்பாலும் நடைபெறும் நிலையில், இருவரும் ரத்த உறவினர்கள் அல்ல என்று இருக்கும்போது எப்படி சொத்து தானம் நடந்தது என்று பலருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.