உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான ஃபுல்தேவி சந்த் லால் என்ற பெண், கடந்த டிசம்பரில் ஷாஹாபூரில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார். மனநல கோளாறு காரணமாக அவர் தனக்கே தெரியாமல் தொலைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
நிறைய நாட்கள் கழிந்தும் அவரை குடும்பத்தினர் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவின் நல்லசோபரா பகுதியில் ரோட்டோரத்தில் தவித்துக் கொண்டிருந்த ஃபுல்தேவியை போலீசார் கண்டுபிடித்து, உள்ளூர் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.
அங்கு தங்கியிருந்த அந்தப் பெண்ணின் விவரங்களை திரட்டி, அந்த அமைப்பின் ஊழியர்கள் கூகுளில் தேடி பார்த்தனர். பல முயற்சிகளின் பின்னர், அவரது சொந்த ஊரை அடையாளம் காண முடிந்தது. உடனே தகவல் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு பிறகு, நேற்று ஃபுல்தேவியின் குடும்பத்தினர் ஆசிரமத்திற்கு வந்து, மகிழ்ச்சியுடன் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.