பழங்குடி பெண்ணுக்கு தீ வைத்து வீடியோ எடுத்த கொடூரம்! – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

திங்கள், 4 ஜூலை 2022 (09:01 IST)
மத்திய பிரதேசத்தில் நில தகராறில் பழங்குடி பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஜுன் சகாரியா. இவரது மனைவி ராம்பியாரி. பழங்குடி சமூகத்தவரான இவர்களுக்கு அரசு நலத்திட்டத்தின் கீழ் நிலம் ஒன்று சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அந்த நிலம் அப்பகுதியை சேர்ந்த உயர்சாதியினரிடம் இருந்து அரசு பறிமுதல் செய்த நிலம் என கூறப்படுகிறது. அதை தொகுப்புகளாக பிரித்த அரசு பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் சகாரியா குடும்பத்தினருக்கு ஒரு பகுதியை வழங்கியுள்ளனர்.

அந்த நிலத்தை தங்களிடம் தர வேண்டும் என அப்பகுதி உயர்சாதியை சேர்ந்தவர்கள் சகாரியா குடும்பத்தை மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த அர்ஜுன் சகாரியாவின் மனைவி ராம்பியாரியை அவர்கள் உயிருடன் தீ வைத்து எரித்து வீடியோவும் எடுத்ததாக அப்பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

தான் வயலுக்கு சென்றபோது தங்களை மிரட்டியவர்கள் டிராக்டரில் சென்றதாகவும், தூரத்தில் வயலில் புகை மூட்டம் தெரிந்ததால் சென்று பார்த்தபோது தனது மனைவி உடல் கருகி கிடந்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது பழங்குடி பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்