கடும் எதிர்ப்பு ; காலா படத்தை வெளியிடும் அலுவலகம் சூறை

புதன், 6 ஜூன் 2018 (16:16 IST)
கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடும் சினிமா நிறுவனங்களின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடகாவில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்குகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நேற்று மாலை கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் 'காலா' படத்தை வெளியிட ஒத்துழைக்கின்றோம் என கன்னட திரைப்பட வர்த்தகசபை அறிவித்துள்ளது.   
 
அப்படி வெளியிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை தயாரிப்பாளரே எதிர்கொள்ள வேண்டும்” எனவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். எனவே, காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  
 
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “கர்நாடகாவில் வீம்புக்காக இப்படத்தை நாங்கள் ரிலீஸ் செய்யவில்லை. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. எனவே, படத்தை வெளியிட அனைவரும் உதவ வேண்டும். நான் எந்த தவறான கருத்தையும் கூறவில்லை. படம் பார்க்க வருபவர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம். படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள்” என அவர் பேசியிருந்தார். 
 
அவரின் வேண்டுகோளை ஏற்று கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடும் உரிமையை கனக்புரா என்கிற விநியோகஸ்தார் வாங்கியுள்ளதாகவும், அவரின் ‘சி’ நிறுவனம் சார்பில் கர்நாடகா முழுவதும் மொத்தம் 130 தியேட்டர்களில் காலா திரைப்படம் வெளியாவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
 
இந்நிலையில், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடும் கொல்டி பிலிம்ஸ் என்கிற நிறுவனத்தின் அலுவலகத்தில் புகுந்த சில கன்னட அமைப்பினர் அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மேலும், அங்கு வைக்கப்படிருந்த காலா போஸ்டர்களையும் கிழித்து சாலையில் எறிந்தனர். அதேபோல், காலா படம் திரையிடப்பட இருந்த தியேட்டர்களின் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த காலா போஸ்டர்கள் மற்றும் பேனர்களை கிழித்து எறிந்தனர்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்