கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, பலரது உயிரை பறித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. லண்டன் செல்லவிருந்த போயிங் விமானம், மருத்துவமனை உணவக கட்டிடத்தின் மீதும், பின்னர் மருத்துவர்கள் விடுதி மீதும் மோதி நொறுங்கியது.
சம்பவ இடத்திற்கு முதலில் சென்றவர்களில் ஒருவர், கட்டுமான தொழில் அதிபர் ராஜு படேல். அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: "விமானம் நொறுங்கியதும், முதல் 15-20 நிமிடங்கள் அருகில் செல்லவே முடியவில்லை. எங்கள் குழுவிடம் ஸ்ட்ரெச்சர்கள் இல்லை. ஆனாலும், தைரியமாக, கிடைத்த சேலைகள், துணிகளை பயன்படுத்தி காயமடைந்தவர்களை தூக்கினோம். உயிர்களை காப்பாற்றுவது மட்டுமே எங்கள் குறிக்கோளாய் இருந்தது. தீயணைப்புப் படையும், ஆம்புலன்ஸும் வந்ததும் முழு மூச்சுடன் மீட்பில் ஈடுபட்டோம்."
சிதறிக்கிடந்த பொருட்களில், 70 பவுன் நகைகள், 80,000 ரூபாய் ரொக்கம், பாஸ்போர்ட்டுகள், ஒரு பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை மீட்டெடுத்ததாக ராஜு படேல் தெரிவித்தார். இந்த பொருட்களை உடனே போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.
மீட்கப்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்தார். இதுபோன்ற அவசர காலங்களில் பொதுமக்களின் பங்கு விலைமதிப்பற்றது என்றும் அவர் பாராட்டினார்.