இதற்கெல்லாமா கொலை செய்வாங்க! பெண்ணிற்கு நடந்த கொடூரம்!

வியாழன், 8 செப்டம்பர் 2016 (14:38 IST)
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி நகரில் வசிப்பவர், வினீத் குமார் திவாகர். 


 
 
இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவியும் 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், பூனம் வர்மா மர்மமான முறையில் வீட்டில் இறந்துக் கிடந்தார். இது குறித்து, வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்த காவல்துறையினர், பூனம் வர்மாவின் கணவர் வினீத்தை துருவி துருவி விசாரித்தனர். அப்போது, அவர் தான் மனைவியை தன் நண்பர்களை வைத்து கொலை செய்ய சொன்னதாக ஒப்புக்கொண்டார். 
 
வினீத் குமார், வாக்குமூலத்தில் கூறியதாவது, “கடந்த மாதம், என் மனைவிக்கு, ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்ததில் இருந்து, அவளின் நடவடிக்கை சரி இல்லை. என்னையும், குழந்தையையும் அவள் அலட்சியப்படுத்த தொடங்கினாள். மேலும், அவள், ஸ்மார்ட்போனில், பேட்டர்ன் லாக் போட்டுள்ளார். அதன் குறியீடை எனக்கு தெரிவிக்க மறுத்தார். அதனால் நான் என் நண்பர்கள் லக்‌ஷ்மண் மற்றும் கமலிடம் ரூ. 80,000 கொடுத்து, அவளை கொலை செய்ய கூறினேன்”. என்றார்.
 
ஆகஸ்ட் 29 தேதி, கமல் மற்றும் லக்‌ஷ்மண் ஆகியோர் பூனம் வர்மாவை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகையை எடுத்துக்கொண்டு, நகைக்காக கொலை நடந்தது போல் வீட்டை அலங்கோலம் படுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த கொலையில், தன்னை காவல்துறையினர் சந்தேகிக்க கூடாது என்று எண்ணி, சம்பவம் நடந்த போது, வினீத் கான்பூர் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வினீத்தை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் அவரின் நண்பர்களை தேடிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்