2,403 அடியை எட்டிய இடுக்கி அணை - வெள்ள அபாய எச்சரிக்கை

திங்கள், 18 அக்டோபர் 2021 (14:31 IST)
ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் தற்போதைய நிலவரப்படி நீர் மட்டும் 2,403 அடியை எட்டியிருக்கிறது. 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் முக்கிய விவசாய பகுதியான குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் காசர்கோடு, வயநாடு ஆகிய 2 மாவட்டங்களை தவிர, கோட்டயம், பத்தனம் திட்டா, மலப்புரம் உள்பட  மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேய்மழை பெய்து வருகிறது. 
 
மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பல அணிகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 29ஐ எட்டியிருக்கிறது. 
 
ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் தற்போதைய நிலவரப்படி நீர் மட்டும் 2,403 அடியை எட்டியிருக்கிறது. இதனால், அந்த அணையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அணையின் கொள்ளளவை விட நீர்மட்டம் அதிகமாகி வருவதால் எந்நேரமும் அணையின் மதகுகள் திறக்கப்படும் என்று கேரள மாநில அரசு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்