சட்டம் ரத்தாகும் வரை போராட்டம் - விவசாயிகள்

வெள்ளி, 19 நவம்பர் 2021 (11:32 IST)
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் டிவிட். 

 
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 
இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். 
 
மேலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு விவசாய சங்கத்தினர் வரவேற்பு அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரை போராட்டம் தொடரும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்