டாக்டர் கெட்டப்பில் வந்த திருடி! நம்பி ஏமாந்த நோயாளி!

செவ்வாய், 17 ஜனவரி 2023 (09:15 IST)
பெங்களூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் போல உடையணிந்து வந்த பெண் நோயாளியிடம் லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நாள்தோறும் புதுப்புது வழிகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபமாக போலீஸ் வேடத்தில் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் டாக்டர் வேடத்தில் பெண் ஒருவர் செய்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் அசோக்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சரசம்மா என்ற மூதாட்டி மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காலை நேரத்தில் டாக்டர் சீருடையில் வந்த பெண் ஒருவர் சரசம்மாவை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி உறவினர்களை வெளியே அனுப்பியுள்ளார்.

ALSO READ: காணும் பொங்கலுக்கு வெளியே செல்லும் மக்கள்! – சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள்!

அவர் சோதனை செய்து சென்ற பின் உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சரசம்மா அணிந்திருந்த லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அந்த பெண் மருத்துவரை உடனடியாக தேடியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அவர் அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் இல்லை என்பதும், மருத்துவர் கெட்டப்பில் வந்த திருட்டு பெண் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டு பெண்ணை தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்