திலீப்பின் சொத்துக்கள் முடக்கம்? - அமலாக்கத்துறையினர் அடுத்த நடவடிக்கை

வியாழன், 13 ஜூலை 2017 (16:01 IST)
கேரள நடிகையை காரில் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லா ஆகியோருக்கு இணையான அந்தஸ்தில் இருப்பவர். ஒரு திரைப்படத்தில் நடிக்க அவர் ரூ.10 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.  சினிமாவில் சம்பாதிப்பது மட்டுமில்லாமல், ரியல் எஸ்டே, ஹோட்டல் போன்ற தொழில்களையும் அவர் செய்து வருகிறார். கேரளாவின் பல இடங்களில் இவருக்கு சொந்தமாக ஹோட்டல்கள் இருக்கிறது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.400 கோடி எனக் கூறப்படுகிறது.
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாள திரையுலகினரின் கருப்பு பண பதுக்கல் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. அப்போது, திலீப்பிடம் கணக்கில் காட்டப்படாத ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.
 
இந்நிலையில்தான், தற்போது திலீப்பின் விவகாரத்தை மீண்டும் தூசி தட்டியிருக்கிறது அமலாக்கத்துறை. துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கருப்பு பண பதுக்கல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 
 
எனவே விரைவில் அவரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்படும் எனத் தெரிகிறது. நடிகை வழக்கு முடிந்தவுடன், இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுக்கும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்