எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

வியாழன், 17 மே 2018 (07:39 IST)
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் மஜக கட்சியுடன்(37 இடங்கள்) இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரை சந்தித்து கால அவகாசம் கோரினார்.
 
பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாக குமாரசாமி குற்றம்சாட்டினார். அணி மாறாமல் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகள் பேருந்துகள் மூலம் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் கூறியிருந்த நிலையில் எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
 
இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.
 
இவ்வழக்கின் அவசரத்தை உணர்ந்து, இந்த வழக்கானது இன்று அதிகாலை 1.45க்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது காங்கிரஸ் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் அளித்தபோதும், 104 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது தவறு என காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது. பாஜகவின் பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என பாஜக தரப்பில் கோரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்றனர்.மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என்றனர். எடியூரப்பா ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்