மத்திய அரசு நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்புக்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் உட்பட ஒரு சில கட்சிகள் மட்டுமே இது ஏமாற்று வேலை என்றும் நாடகம் என்றும் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், மோடியின் ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு பின்னணியில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாகவும், இதில் ஜாதி வாரி கணக்கெடுப்பு மட்டும் இன்றி மத வாரியாக கணக்கெடுப்பும் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என ஒவ்வொரு மதத்திலும் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கணக்கெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அது மட்டும் இன்றி, வாக்காளர் அடையாள அட்டையில் பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்த ஆவணங்களும் இணைக்கப்படும் என்றும், அதேபோல் ஒருவர் இறந்து விட்டால் தானாகவே வாக்காளர் அடையாள அட்டை காலாவதி ஆகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜாதி வாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர், அதனை அடுத்து நடக்கும் தேர்தலில் ஒரு வாக்கு கூட போலியான வாக்காக பதிவு செய்ய முடியாது என்றும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்றும் கூறப்படுகிறது.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அதை செயல்படுத்தும் விதத்தில் தான் மோடியின் ராஜதந்திரம் இருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.