சேவைக் கட்டணங்களை ரத்து செய்து பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் புதிய அறிவிப்பு!!

புதன், 23 நவம்பர் 2016 (16:21 IST)
ரூபாய் நோட்டுகள் மாற்றம், ஏடிஎம் சேவை, புதிய ரூபாய் நோட்டு ஆகியன தொடர்பாக மத்திய அரசு அவ்வப்போது சில நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து கூறிகையில்...


 
 
தகவல்களின் முக்கிய அம்சங்கள்:
 
1. கிராமக் கூட்டுறவு வங்கிகளுக்கு போதுமான அளவு ரொக்கம் அனுப்பப்படும். ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
2. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21,000 கோடி ரொக்கம் வழங்க நபார்டு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
3. வரும் 1-ம் தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்படமாட்டாது. அனைத்து அரசு அலுவலகங்களும் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் சம்பளத்தை வரவு வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
4. டிசம்பர் 31 வரை ஏடிஎம் பயன்பாட்டுக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. பொதுத் துறை வங்கிகளும் ஒருசில தனியார் வங்கிகளும் ஏடிஎம் கட்டணத்தை ரத்து செய்ய முன்வந்துள்ளன.
 
5. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணம் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
 
6. நாடு முழுவதும் 82,000 ஏடிஎம் இயந்திரங்கள் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
 
7. செல்போன் மூலம் பண பரிவர்த்தனை செய்தால் சேவைக் கட்டணம் கிடையாது. ஆனால், இந்தச் சலுகை 'ஃபீச்சர் போன்' பயன்படுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும். அதேவேளையில் அனைத்து ஸ்மார்ட் போன்களும் எல்லாம் ஃபீச்சர் ஃபோன் அல்ல.
 
8. சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்