மாதம் ரூ.8 லட்சம் சம்பாதித்த ஆட்டோ டிரைவர்.. ஆப்பு வைத்த ஒரே ஒரு லிங்க்ட்-இன் பதிவு..!

Mahendran

வியாழன், 12 ஜூன் 2025 (11:10 IST)
மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியே, ஒரு ஆட்டோ ஓட்டுநர்  வித்தியாசமான சேவை மூலம் மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதித்து வந்த நிலையில் தற்போது ஒரே ஒரு லிங்க்ட்-இன் பதிவால் அவர் தனது சேவையை முடித்து கொண்டார்.
 
அமெரிக்க விசா எடுக்க வருபவர்கள், தூதரகத்திற்குள் பைகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால் சிரமப்படுவார்கள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநர், தனது வண்டியை அங்கேயே நிறுத்தி, பைகளை சேமிக்கும் சேவையை ஆரம்பித்துள்ளார். அருகில் வேறு எந்த அதிகாரப்பூர்வ வசதியும் இல்லாததால், இது அவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.
 
இந்த நிலையில் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் ராகுல் ரூபானி தனது அனுபவத்தை லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்தபோதுதான் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்தது. ரூபானி தனது பையை இந்த ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.1,000 கொடுத்துப் பாதுகாப்பாக ஒப்படைத்திருக்கிறார். ராகுல் ரூபானி கணக்குப்படி, ஆட்டோ ஓட்டுநர் தினமும் 20 முதல் 30 வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்திருப்பார், இதன் மூலம் தினமும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதித்திருப்பார். ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு இவ்வளவு பெரிய வருமானமா எனப் பலரும் ஆச்சரியப்பட்டனர்.
 
இந்தச் செய்தி வைரலானதும், மும்பை போலீசார் உடனடியாகக் களமிறங்கி அந்த ஆட்டோ ஓட்டுநரையும், அவரைப் போலவே செயல்பட்ட மேலும் 12 பேரையும் அழைத்து இந்தச் சேவை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக கூறியதால் தற்போது யாரும் இந்த சேவையை தொடரவில்லை.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்