ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை..! 20 மணி நேரம் போராடி உயிருடன் மீட்பு..!!

Senthil Velan

வியாழன், 4 ஏப்ரல் 2024 (14:52 IST)
கர்நாடகவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தையை சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். 
 
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தில் விவசாயத்திற்கு 30 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது.  
 
இந்த ஆழ்துளை மூடாமல் இருந்ததால், ஒன்றரை வயது குழந்தை எதிர்பாராமல் அதில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில் மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் பெயர் சாத்விக் என்பதும், குழந்தையின் தந்தை ஆழ்துளை கிணற்றை தோண்டி மூடாமல் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ALSO READ: சூடு பிடிக்கும் தேர்தல் களம்..! ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் - ராகுல் பிரச்சாரம்...!
 
இதை அடுத்து குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை சாத்விக் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டான்.  உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்