எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

Mahendran

வெள்ளி, 9 மே 2025 (12:25 IST)
ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக நேற்று இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
 
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
அதேபோல் பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
 
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளனர்.
 
அதிநவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்த 7 பயங்கரவாதிகளையும் இந்திய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
 
மேலும், அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் பெரிய அளவிலான பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டிருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்