நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக் கொள்கிறது. இந்த தோல்விக்கு காங்கிரஸ் கட்சியை வழிநடத்திய ராகுல் காந்தி மட்டுமே காரணம் அல்ல. ஒட்டுமொத்த காரணிகளுமே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டன என்று கூறியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, அம்மாநில முதல்வர் தருண் கோகோய் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், பாஜகவின் தேர்தல் உத்தியும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மனப்போக்கும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்று கூறினார்.
மக்களவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. முன்னிலை விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 335 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும், இதர கட்சிகள் 147 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.