ராம்தேவ் உண்ணாவிரதம்: காங்கிரஸ் அவசர ஆலோசனை

வியாழன், 2 ஜூன் 2011 (15:55 IST)
கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக யோகா குரு ராம் தேவ் அறிவித்துள்ளதை தொடர்ந்து, இப்பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சி இன்று மாலை அவசரமாக ஆலோசனை நடத்த உள்ளது.

கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி. வருகிற 4 ஆம் தேதியில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக யோகா குரு ராம்தேவ் அறிவித்துள்ளார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் நேற்று கோரிக்கை விடுக்கபப்ட்டபோதிலும், அதனை ஏற்க ராம்தேவ் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ராம்தேவ் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் மற்றும் இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

இந்த விவகாரத்தைக் கையாளும் வழிமுறைகள் விடயத்தில் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோனி, ப.சிதம்பரம் மற்றும் சோனியாவின் அரசியல் செயலர் அகமது படேல் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்