நம்மை நாமே காதலிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாமா? நம்மை நாமே காதலிக்க தொடங்கும் போது அடுத்தவர்களுடைய உணர்வுகளை நம்மால் விரைவில் உணர முடியும். அதனால் முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும்.
உங்களைப் பற்றி உங்களை விட உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்குப் பிடித்தவர்களுக்கும் தான் நன்கு தெரிந்திருக்கும். எனவே உங்களுக்கு விருப்பமானவர்களிடம் சென்று உங்களிடம் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னென்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்களிடம் உங்களுக்கே பிடித்தமான விஷயங்கள் என்று நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களையே ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டு உங்களையே நீங்கள் விரும்ப ஆரம்பியுங்கள். இது போன்ற ஆத்மார்த்தமான அன்புணர்வு உங்களுக்குள் ஏற்படும் போது அது உங்களின் மனதை இலகுவாக்கும்.
மன ரீதியான சுய பரிசோதனை, கேள்விகள் கேட்டு நீங்களே உங்களை தெளிவுபடுத்துதல், உங்களுக்கு நீங்களே ஆலோசனைக் கூறுதல், ஒரு சில முடிவுகளை தீர்க்கமாக யோசித்து உணர்ந்து முடிவெடுத்தல் போன்றவற்றின் மூலம் உங்களது ஆளுமை வெளிப்படும்.
இதனால் உங்கள் மீதான தன்னம்பிக்கை, தைரியம் போன்றவை அதிகரித்து பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். அது கர்வமாக வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர முற்படுங்கள்.
உங்கள் மனதில் எழும் எதிர்மறையான சிந்தனைகள், குழப்பமான எண்ணங்கள் இவற்றையும் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து ஒன்று அதனைக் களையுங்கள். அல்லது தேவையில்லாத எண்ணங்களாக இருந்தால் அந்த சிந்தனையை மாற்றுங்கள்.
இவற்றை எல்லாம் முறையாக செயல்படுத்திய பிறகு, உங்களுடைய தேவை என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டும். உங்களது லட்சியம், பாதை போன்றவற்றை தீர்மானித்து அதன்படி வாழ்க்கையை மாற்றுங்கள்.