வெப்கேமில் தெரியும்படி தூக்கில் தொங்கிய காதலன்

செவ்வாய், 18 மார்ச் 2008 (16:49 IST)
காதல் தோல்வியில் மனமுடைந்த காதலன், வெப்கேமில் தனது காதலி பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கில் தொங்கினான்.

கேரள மாநிலம் கன்னூரில் நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம். பரியராம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு பல் மருத்துவம் படிக்கும் கார்த்திக் தான் அந்த காதல் கிறுக்கன்.

தன்னுடனான காதலை முடித்து கொள்வதாக காதலி தெரிவித்ததும், அதனை தாங்க முடியாத கார்த்திக் இந்த கொடிய முடிவை தேடிக் கொண்டுள்ளான்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கார்த்திக் தூக்கில் தொங்குவதற்கு முன்பு வெப்கேமில் தனது காதலியுடன் பேசியுள்ளான். தான் இந்த முடிவு எடுத்திருப்பதையும் கூறி தான் தூக்கில் தொங்குவதையும் வெப்கேமில் காதலி பார்க்கும்படி செய்திருக்கிறான்.

இந்த நிலையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த கார்த்திக், நாள் முழுவதும் அறையை விட்டு வெளியே வராததால் அவனது நண்பர்களை அறைக் கதவை உடைத்து உள்ளேச் சென்றபோதுதான் இந்த துயர சம்பவம் தெரிய வந்தது.

வெப்கேமில் கார்த்திக் தற்கொலை செய்து கொள்வதைக் கண்ட அந்தப் பெண்ணும், கார்த்திக்கை தற்கொலை செய்து கொள்ளாதே என்று கெஞ்சியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஸ்ரீஜித், பிடிஐ செய்தியாளர்களிடம் பேசுகையில், கார்த்திக்கின் அறையில் இருந்த கணினி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலைத் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கணினியை பரிசோதித்தப் பின்னரே தற்கொலைப் பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்றும் ஸ்ரீஜித் கூறியுள்ளார்.

கார்த்திக்கைக் காதலித்த அந்த பெண் டெல்லி கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வருவதாகவும், கார்த்திக்கிற்கு தூரத்து உறவுக்காரப் பெண் என்பதும் அவர்களது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்