முதலில் வந்தது யார்..? சேகர்பாபு ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்..!

Senthil Velan

திங்கள், 25 மார்ச் 2024 (13:36 IST)
வடசென்னையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
 
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் வடசென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது திமுக வேட்பாளர் கலாநிதி வீராச்சாமி உடன்  அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வருகை புரிந்தனர். 
 
முதலில் வந்த எங்களிடம் தான் வேட்பு மனு வாங்க வேண்டும் என ஜெயக்குமாரும், எங்களிடம் முதலில் வாங்குங்கள் என சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதலில் தங்கள் மனுவை பெற வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. 

மற்றொருபுறம் பாஜகவினர் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முதலில் வந்தது அதிமுகவினர் என தேர்தல் அதிகாரி கூறியும், சேகர்பாபு வாக்குவாதம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தேர்தல் அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

ALSO READ: வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு..! ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல்.!!

இதனிடையே வேட்பு மனு சர்ச்சை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்