அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. பா.ம.க..? எத்தனை தொகுதிகள்..!!

Senthil Velan

சனி, 10 பிப்ரவரி 2024 (15:59 IST)
பா.ம.க.வும் தே.மு.தி.மு.க.,வும், அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக  கூறப்படும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையும் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மக்களவை தேர்தலை ஒட்டி பாமக,  தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
பா.ம.க.,வுக்கு ஆறு தொகுதிகளும், தே.மு.தி.கவுக்கு மூன்று தொகுதிகளும், தலா ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் தருவதாக, அ.தி.மு.க., தரப்பில் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
 
இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,  பாஜக, அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதற்கான பேச்சு நடத்தவும், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
 
பா.ம.க., தரப்புடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்தே, சமீபத்தில், திண்டிவனம் தைலாபுரத்தில் ராமதாஸ் - சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர். 
 
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும், பா.ம.க.,வுக்கு வழங்கப்பட்டன. தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், கூட்டணி ஒப்பந்தப்படி, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., வழங்கியது.
 
இந்த தேர்தலில், ஆறு  மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் பா.ம.க.,வுக்கு வழங்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். இதர சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை, முதல்வராக இருந்த பழனிசாமி வெளியிட்டார். அந்த நன்றி கடனுக்காக, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, ராமதாசும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தராமல் இருந்த அதிருப்தியை விட, அண்ணாமலையின் அபார வளர்ச்சி பா.ம.க.,வை பாதிக்கும் என்பதால், பாஜகவுடன்  கூட்டணி அமைக்க, ராமதாஸ் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
 
அதேபோல், கடந்த மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. தோற்றதும், அக்கட்சி துணை பொதுச்செயலர் சுதீஷுக்கு, பா.ஜ.,விடம் ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்கப்பட்டது. ஆனால், தரப்படவில்லை.  
 
அ.தி.மு.க., தரப்பில் அன்புமணிக்கும், ஜிகே வாசனுக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவிகள் வழங்கினோம். அப்போதும் கூட, சுதீஷுக்கு பதவி தர, பாஜக தரப்பு முன்வரவில்லை. அந்த ஆதங்கம், தே.மு.தி.க.,வுக்கு இன்னமும் உள்ளது.

ALSO READ: பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி..! யாருக்கும் பெரும்பான்மை இல்லை..! கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு..!!

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் பலரும், அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்றே, பிரேமலதாவிடம் வலியுறுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு மூன்று மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் தருவதாக, பழனிசாமி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. அதை ஏற்கும் முடிவில் பிரேமலதா இருப்பதாக தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்