கட்டு கட்டாக சிக்கியப் பணம் – வேலூரில் தேர்தல் நடக்குமா ?

திங்கள், 1 ஏப்ரல் 2019 (14:38 IST)
வேலூரில் இன்று மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ள நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தல் நடப்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல்   8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை துரை முருகன் மறுத்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தோல்வி பயத்தாலேயே பாஜக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

அதையடுத்து ஒருநாள் இடைவெளியில் இன்று மீண்டும் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கொடவுனில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக அனுப்பவேண்டிய விவரங்களும் அதன் கவர்களில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதனால் வாக்குகளுக்குப் பணம் கொடுத்ததாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா அல்லது வேலூர் தொகுதிக்கே தேர்தல் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்