திறமையே வெற்றிக்கு காரணம்! சினோஜ் கட்டுரைகள்

சனி, 26 நவம்பர் 2022 (23:10 IST)
நான் சிறுவயதில் இருக்கும்போது, கிங் ஆப் பாப் மைக்கில் ஜாக்சனைப் போன்று பெரிய வீடு கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இதைப்பற்றி என் தந்தையிடமும் கூறினேன். அவரோ அதெல்லாம் வீண் கற்பனை என்று கூறினார். நான் என் திறமையை வளர்த்துக்கொண்டேன். அதன் மூலம் இன்று அன்று ஆசைப்பட்டதைக் காட்டிலும் பெரிய வீட்டில் வசிக்கிறேன் என்று இன்றைய தேதியில் உலகின் மூன்றாவது அதிகத் தொகைக்குக் கால்பந்து விளையாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியிருந்தார்.

சூரியனை நோக்கிப் பறக்கும் கழுகு சூரியனைத் தொடமுடியாது; ஆனால், அது நிர்ணயித்த ஓரிலக்குடன்தான் அதை மேகத்தின் மதகுகளைத் தாண்டியும் மழை அதனுடலைத் தீண்டாமல், வானுயரத்தில் பறக்கமுடிகிறது.

எல்லோருக்கும் ஆசைகள் கடலைப் போன்றுள்ளது. அதை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் யாரிடம் உள்ளது என்பதுதான் கேள்வி?

சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனது திறமைகளும் அவனுடன் சேர்ந்து வளர்க்கிறதா?

சமீபத்தில், ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாணவர்கள் பட்டப்படிப்புடன் மட்டும் படிப்பதை விட்டுவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார்.

நாள்தோறும் கற்றுக்கொள்ளும் மனோபாவம்தான் ஒருவரை எந்த நிலையிலிருந்தாலும் அவர்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும்.

தமிழ் எழுத்தாளர்களில் மூத்த படைப்பாளி வண்ணதாசன், ஒன்றும் தாமதமகிவிடவில்லை; இந்த இடத்தில் ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களைத் தொடமுடியுமென்ற வாழ்க்கையின் எதார்த்தைப் பற்றிய தன் அனுபவார்த்த தத்துவமொழியாக உதிர்த்திருப்பார்.

இன்றைய காலத்தின் அனைத்து சமூக வலைதளங்களிலும் ஏராளமான செய்திகளும், தகவல்களும்,கட்டற்ற கட்டுரைகளும் கிடைக்கிறது.

ஆனால், இதையெல்லாம் படித்து நம் அனுபவத்தை வளர்த்துக்கொள்ளுகிறவர்கள் சிலர்தான்.

ALSO READ: ''எல்லாம் நன்மைக்கே ''- சினோஜ் கட்டுரைகள்
 

நாம் சமூக ஊடகத்தில் மூழ்கித் திளைக்கிறோம். அதன் மூலம் அந்த  நிறுவனம் வளர்கிறது. அதைப் பயன்படுத்துவதால் நாமும் வளர்வதற்கு முயற்சி எடுப்போமானால், அது நம்மை இந்த இடத்திலிருந்து  ஒரு ஹெலிஹாப்டர் போல் நம்மை உயர்த்தும்.

பறவைகளுக்காவது சிறகுகள் இருக்கிறது மேலே உயர்ந்துசெல்ல…ஆனால், நமக்கு நாம் தான் இருக்கிறோம். நம் திறமைகளை மூலதனமாக்கிக் கொண்டு முன்னேறும்போது, விலகியவர்கள், விலக்கிவைத்தவர்களும் கூட அந்த வெற்றியை விதைத்தவர்களாகிய  நம்மைத் தேடி வருவார்கள்.

எனவே திறமையை வளர்த்துக் கொள்வோம்!

தொடரும்....

#சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்