வோடஃபோனை கழட்டிவிடும் ஐடியா? – என்ன ஐடியா சார் ஜி!

வியாழன், 14 நவம்பர் 2019 (12:39 IST)
வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் அதிகமான கடனில் சிக்கி தவிக்கும் நிலையில் புதிய முதலீடுகளை செலுத்தாமல் ஐடியா நழுவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் 99 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. சமீபத்தில் இதுகுறித்து தீர்ப்பு வெளியிட்ட நீதிமன்றம் கடன் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டது. அதிகமான கடன் சுமையால் லண்டனை தலைமையகமாக கொண்ட வோடஃபோன் நிறுவனம், ஆதித்யா பிர்லாவின் ஐடியா நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனாலும் இரு நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளன.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய இந்நிறுவனங்கள் கடன்சுமையை தளர்த்த மத்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன. ஜியோ அதற்கு ஆட்சேபணை தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த பிரச்சினை இன்னும் தீர்வாகாத சூழலில் நிறுவனத்தில் புதிய முதலீடுகள் செலுத்துவது அவசியமாகி உள்ளது. ஆனால் ஆதித்யா பிர்லா புதிய முதலீடுகளை செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடன் பிரச்சினையில் உள்ள நிறுவனத்தை புதிய முதலீடுகள் இன்றி நடத்துவது சிரமம் ஆகியுள்ளது.

இதனால் வோடஃபோன் வெளி நபர் முதலீடுகளை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய வோடபோன் துணை நிறுவனர் “புதிய முதலீடுகளும், அரசின் உதவியும் இல்லாமல் இந்தியாவில் வோடஃபோனால் இயங்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

ஐடியாவும் தற்போது கைவிட்டு விடும் சூழலில் இருப்பதால் வேறு ஐடியாக்களை செயல்படுத்தி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது வோடஃபோன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்