குழாய் புட்டு

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (14:55 IST)
webdunia photoWD
நம்ம ஊரில் புட்டு செய்வது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த கலை. ஆனால், குழாய் புட்டு என்பது கொஞ்சம் தெரியாத சமாச்சாரம்.

ஏன் அதையும் விட்டு வைக்க வேண்டும்.

எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை

அரிசி மாவு - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - முழுத் தேங்காய்
தண்ணீர்
உப்பு
சர்க்கரை

செய்யும் முறை

தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

இந்த தண்ணீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசைந்து கொள்ளவும்.

தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகி விடக் கூடாது. மாவு மாவாகவே இருக்க வேண்டும். ஆனால் மாவில் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது குழாய் புட்டு செய்வதற்கான பாத்திரத்தின் அடியில் தண்ணீர் ஊற்றிவிட்டு, அப்பகுதியை மூடிவிட்டு ஒரு கைப்பிடி புட்டு மாவை குழாயினுள் போட வேண்டும்.

webdunia photoWD
பின்னர் ஒரு கைப்பிடி தேங்காய் துருவலைப் போட வேண்டும். பின்னர் மாவு, தேங்காய் துருவல் என அந்த குழாய் முடியும் வரை மாற்றி மாற்றி நிரப்பி மூடி விட வேண்டும்.

பின்னர் குழாய் புட்டு பாத்திரத்தை சுமார் 5 முதல் 8 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கிவிடுங்கள்.

அழகான நீளமான குழாய் புட்டு தயார். உடைந்தாலும் கவலையில்லை. அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள்.

ஆனால் கேரள வாசிகள் இந்த குழாய் புட்டுக்கு பயறு செய்து சாப்பிடுவார்கள். அது எப்படி என்று அடுத்து பார்க்கலாம். அதுவரை குழாய் புட்டை ருசித்துக் கொண்டிருங்கள் சர்க்கரையுடன்.