பெருமாளை வழிபடுவதற்கு பல வழிகள் இருந்தாலும், ஏகாதசி மற்றும் திருவோணம் ஆகிய இரண்டு விரதங்கள் மிகவும் முக்கியமானவை. ஏகாதசி மாதத்திற்கு இருமுறை வரும் நிலையில், திருவோணம் நட்சத்திர விரதம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும். ஏகாதசி விரதம் குறித்து பலரும் அறிந்திருந்தாலும், திருவோண விரதம் பற்றி அறிந்தவர்கள் குறைவு. இதனால் மிகச் சிலரே இந்த விரதத்தை கடைப்பிடிப்பதுண்டு.
வாமனராகவும், திரிவிக்ரமனாகவும் அவதாரம் எடுத்த திருவோண நட்சத்திர நாளில் கடைப்பிடிக்கப்படும் இந்த விரதம், வாழ்வில் வளர்ச்சியையும், சகலவிதமான நன்மைகளையும் தரக்கூடியது.
பெருமாளின் அருளை வேண்டி இருக்கும் இந்த விரதம், மகிழ்ச்சி, செல்வ வளம், முன்னேற்றம், மோட்சம் ஆகியவற்றை அருளக்கூடியது. அது மட்டுமல்லாமல், வைகுண்டத்திற்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தையும் திருவோண விரதம் தரவல்லது.
திருவோண விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை உடுத்தி பெருமாளுக்குத் தீர்த்தம், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, வாசனை மிகுந்த மலர்களைச் சூட்டி வழிபட வேண்டும். உணவை தவிர்த்து, இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தியானம், வழிபாடு, மந்திர ஜபம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மாலையில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பின், பெருமாளுக்குப் படைத்த நைவேத்தியத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.