தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள '108 சிவாலயம்' அல்லது ராமலிங்க சுவாமி திருக்கோவில், 'கீழை ராமேஸ்வரம்' என்று பக்தர்களால் போற்றப்படும் ஓர் அரிய புண்ணியத்தலம். இக்கோவிலின் தல வரலாறு, ராமபிரான் சீதா தேவியுடனும், லட்சுமணருடனும் இங்கு வந்து, தன் தோஷங்கள் நீங்க 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாய் கூறுகிறது. இதனால் மூலவர் ராமலிங்க சுவாமி என்றும், அம்பாள் பர்வதவர்த்தனி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மேற்கு நோக்கிய கோவில்களில் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்தத் தலமும், இங்குள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே அமைந்துள்ளன. இக்கோவிலில் ஒருமுறை தரிசித்தால், 108 சிவன் கோவில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மனிதர்கள் செய்யும் சாபங்கள், தோஷங்கள், பாவங்கள் ஆகியவற்றைப் போக்கும் தலமாகப் பாபநாசம் 108 சிவாலயம் திகழ்கிறது. இங்குத் தென்னகத்திலேயே மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும், கோவில் முகப்பில் சூரிய தீர்த்தமும் உள்ளன. ராமேஸ்வரத்தில் பூஜை செய்த பின்பும் ராமபிரானைத் தொடர்ந்த தோஷத்தை நீக்க, அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்ததும், சீதா தேவி மணலில் உருவாக்கியதுமான 108 சிவலிங்கங்களை இங்கு பிரதிஷ்டை செய்தார்.
இங்குள்ள ராமலிங்க சுவாமி சன்னிதி விமானம் ராமேஸ்வரம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னிதி விமானம் காசி விஸ்வநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளன. இதனால் காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம். இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருப்பது தனிச்சிறப்பு. மாசி மாதத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரிப் பெருவிழா இங்கு மிகவும் விமரிசையாக நடைபெறும்.