தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகக் குளத்தின் வடகரையில், புகழ்பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் எழிலுடன் உயர்ந்து நிற்கிறது. இந்த கோவில், நவகன்னிகள் தலமாகப் போற்றப்படுகிறது.
விழாவிற்காக, முன்னதாக பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் கொடி மரத்திற்கு அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து, நந்தி பெருமானின் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் போது, தினமும் காலை, மாலை நேரங்களில், சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, வருகிற 10-ந்தேதி வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதியுலா, 11-ந்தேதி தேரோட்டம், 12-ந்தேதி மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்தும் ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் உறுதியாக மேற்கொண்டு வருகின்றது.