மாணிக்கவாசகர் குருபூஜை: திருவாசகத்தின் மகத்துவம் - ஓர் ஆன்மீகப் பார்வை!

Mahendran

சனி, 28 ஜூன் 2025 (18:30 IST)
மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர் சைவ சமய நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். இளம் வயதிலேயே ஞானத்தில் சிறந்து பாண்டிய மன்னரின் அமைச்சரானார். ஒருமுறை குதிரை வாங்க சென்றபோது, திருப்பெருந்துறையில் மரத்தடியில் வீற்றிருந்த சிவபெருமானை கண்டு ஞானம் பெற்றார். அப்போது சிவன், அவரது பாடல்களை கேட்டு, "உன் சொற்கள் மாணிக்கம் போன்றவை, நீ இனி மாணிக்கவாசகன்" என்று கூறி மறைந்தார். துறவியான மாணிக்கவாசகர், மன்னரின் பொன் பொருட்களை ஆலய திருப்பணிக்குச் செலவிட்டார்.
 
ஆடி மாதம் குதிரைகள் வந்து சேரும் என்ற இறை அசரீரியை மன்னரிடம் தெரிவித்தார். ஆனால், குதிரைகள் வராததால் மன்னர் அவரை சிறையிலடைத்தார். சிவன் நரிகளை குதிரைகளாக்கி அனுப்ப, மாணிக்கவாசகர் விடுதலை செய்யப்பட்டார். குதிரைகள் நரிகளாக மாறவே, கோபமடைந்த மன்னர் மாணிக்கவாசகருக்கு மரண தண்டனை விதித்தார். அப்போது வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மன்னர் தவறை உணர்ந்து, அவரை மீண்டும் அமைச்சராக்கினார். ஆனால், மாணிக்கவாசகர் மறுத்து சிதம்பரம் சென்று இறைவனை பாடினார். அப்பாடல்களை சிவபெருமானே 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்' என்று எழுதி மறைந்தார். இந்தப் பாடல்களே திருவாசகம் எனப்படுகிறது.
 
"நமச்சிவாய வாழ்க..." போன்ற பாடல்கள் அடங்கிய திருவாசகம், வெறும் பாடல்கள் அல்ல; அது சிவபெருமான் மீதான ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடு. ஆன்மாவின் தேடலையும், இறைவனுடன் கலக்கும் அனுபவத்தையும் விவரிக்கும் தனிச்சிறப்புமிக்க நூல் இது. மாணிக்கவாசகரின் வாழ்க்கை சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்ததாகும். ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் அவர் சிவபெருமானுடன் ஜோதியாக ஐக்கியமான நாளே மாணிக்கவாசகர் குருபூஜையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இந்நாளில் சிவன் கோவில்களில் வழிபடுவதும், திருநீறு, ருத்ராட்சம், திருவாசகம் போன்ற சிவ வழிபாட்டுப் பொருட்களைத் தானம் செய்வதும் சிறப்பு. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்