திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்!

Mahendran

திங்கள், 2 ஜூன் 2025 (18:38 IST)
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பத்மநாபசுவாமி கோவில், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள முக்கிய விஷ்ணு தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
 
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர்.
 
கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் புதுப்பிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் நடந்து வந்தன. இவை 2017-ல் உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் துவங்கப்பட்டன.
 
கொரோனா காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்த பணிகள் 2021-ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு இப்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.
 
இதனைத் தொடர்ந்து, 270 ஆண்டுகளுக்குப் பிறகு, மகா கும்பாபிஷேகம் ஜூன் 8-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
 
இந்நிகழ்வில் மூலவர் சன்னதியின் மேல்கூறிய கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், மற்றும் ஒற்றைக்கல் மண்டபத்தின் மேலுள்ள கலசம் ஆகிய நான்கு கலசங்களுக்கு புனித நீராட்டம் செய்யப்படுகிறது.
 
விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னதியில் அஷ்டபந்த கலச நிறுவல் போன்ற நிகழ்வுகள் அதே நாளில் நடைபெறும்.
 
கும்பாபிஷேகத்திற்கு முன், பாரம்பரிய முறையிலான யாகங்கள், பூஜைகள் முன்னதாகவே ஆரம்பமாகும்.
 
பக்தர்கள், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவிலில் நடைபெறும் இந்த புனித நிகழ்வில் பங்கேற்கும் அரிய வாய்ப்பைப் பெற உள்ளனர்.
 
கோவில் நிர்வாகம், அனைத்து ஆன்மிக சடங்குகளும் முறையாக நடக்க ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்