உலக அளவில் உடல் பருமன் பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து வரும் நிலையில் அதன் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள ரிப்போர்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல நாடுகளில் பசி, பஞ்சம் காரணமாக மக்கள் பலியாவது இயல்பாக இருந்து வந்தது. ஆனால் இனி மக்கள் பசியை விட உடல் பருமன் அதிகரிப்பு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் மரணமடைய அதிக வாய்ப்புள்ளது என யுவால் நோவா ஹராரி தனது ஹோமோடியஸ் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோலவே உலகம் முழுவதும் உடல் பருமன் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. மாறிவரும் துரித உணவு முறைகள், மக்களின் வாழ்க்கை முறை, தூக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகள் உடல் பருமன் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் உடல் பருமன் அதிகரிப்பால் சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், மாரடைப்பு பாதிப்புகளும் அதிகரிக்கின்றன. பலரும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி செய்தாலும் கூட அவ்வளவு எளிதில் எடை குறைக்க முடிவதில்லை அல்லது சில நாட்கள் கேப் விட்டாலே உடல் எடை கூடி விடுகிறது.
இந்த உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த உடல் பருமன் பெரும் பிரச்சினையாக மாறி வருவதாக கூறப்படுகிறது. ஒரு ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 2050ம் ஆண்டிற்குள் 45 கோடி பேர் உடல்பருமன் பிரச்சினையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியர்களின் தற்போதைய உணவு முறை நவீன துரித உணவுகளை அதிகம் விரும்புவதாக அமைந்துள்ளது. பலரும் ஐடி போன்ற அலுவலக பணிகளில் ஈடுபடுவதால் இவை இரண்டுமே சேர்ந்து உடல் பருமன் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். எனவே ஒவ்வொரு நாளும் உடல்நலத்திற்காக சிறிது நேரத்தை செலவிட்டு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்வதன் மூலமாக இதை கட்டுப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K