மாரடைப்பு வருவதற்கான காரணங்களும், அறிகுறிகளும் பற்றி தெரிந்து கொள்வோம்!

இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த  ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

 
சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து  விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
 
உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள்  படிந்துகொண்டே வரும். 
 
ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி  ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.
 
புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம்.  அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
 
அறிகுறிகள்:
 
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
 
கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை.  அப்போது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும்  பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.
 
மாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம்  தோன்றும். இரு தோள்களில் முக்கியமாக இடது தோளில் ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும்  வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள் இதை வாயுக்  கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா  என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.
 
கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம். அறிகுறிகளே  இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்