நெஞ்சுவலிக்கு காரணம் வாய்வா, மாரடைப்பா: எப்படி வேறுபடுத்தி புரிந்து கொள்வது?

Mahendran

வியாழன், 29 மே 2025 (18:52 IST)
வாய்வும் மாரடைப்பும் இரண்டிலும் நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் இந்த இரண்டையும் வேறுபடுத்துவதில் பலர் குழப்பம் அடைகின்றனர். நெஞ்சு வலி வந்தால் உடனே இதய பிரச்சனை என பயப்படுவோம். அதே நேரத்தில், அதை தவிர்க்கவும் கூடாது, ஏனெனில் சில நெஞ்சு வலிகள் உண்மையில் ஆபத்தானவை.
 
வாய்வால் ஏற்படும் நெஞ்சுவலி பெரும்பாலும் மேல் வயிற்றில் தொடங்கி நெஞ்சு பகுதிக்குள் பரவுகிறது. அடிக்கடி ஏப்பம் வருவது, வயிறு வீக்கம், வாயில் காற்று சிக்குவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம். உடலை நகர்த்தும்போது வலி மாறலாம், வெந்நீர் அல்லது சீரக நீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கலாம்.
 
மாரடைப்பால் ஏற்படும் நெஞ்சுவலி கடுமையாகவும் தொடர்ந்து நீடித்தும் இருக்கும். நெஞ்சு நெரிக்கப்படுவது போல வலிக்கும். வலி இடது கை, தோள்பட்டை, கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கு பரவலாம். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், அதிக வியர்வை ஆகியவையும் இருக்கலாம். சில நிமிடங்களில் முதல் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.
 
உடற்பயிற்சி செய்யும் போது, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போதும் மாரடைப்பு ஏற்படக்கூடும். சில நேரங்களில் இதயம் தவிர, நுரையீரல், உணவுக்குழாய், விலா எலும்பு போன்ற பிரச்சனைகளாலும் நெஞ்சு வலி ஏற்படலாம்.
 
 நெஞ்சுவலி வந்தவுடன் பராமரிப்பின்றி விட்டுவிடக்கூடாது. வீட்டிலுள்ள சாதாரண நிவாரணங்களை முயற்சி செய்த பின்பும் வலி நீங்காவிட்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்