செல்லுபடியாகாத 500 மற்றும் 1,000 நோட்டுகள்: மக்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை!!

புதன், 9 நவம்பர் 2016 (11:18 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அமலக்கு வந்துள்ளது. இந்நிலையில் மக்கள் செய்ய வேண்டியவை என்ன என்று ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.


 
 
நவம்பர் 10ம் தேதி முதல் ஏற்கனவே உள்ள ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு வங்கியின் கிளையிலும், அஞ்சலகத்திலும் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.
 
தனி நபர் ஒருவர் ரூ.4000 வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டு வாங்கி கொள்ளலாம். அதற்கு மேலான தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.
 
பணத்தை மாற்றும் போதும், டெபாசிட் செய்யும் போதும் அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும். 
 
4000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கி சேவை, டெபிட் கார்டு மூலம் செலவு செய்யலாம். வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கிக்கணக்கு தொடங்கப்படும்.
 
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் எடுக்க சில நாட்கள் ஆகும். நவம்பர் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ஏடிஎம்-ல் 2000 ரூபாயும், 19ம் தேதி முதல் 4000 ரூபாய் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பின்பு நாள் ஒன்றுக்கு உச்ச வரம்பு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
 
நவம்பர் 24ம் தேதி வரை பணம் எடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாயும், காசோலையில் 20,000 ரூபாய் வரையும் பணம் எடுக்க முடியும். 
 
மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.
 
டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான சேவை ஆகியவற்றிற்கு 11-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும்.
 
கூடுதல் விவரங்களுக்கு https://www.rbi.org.in/ என்ற ரிசர்வ் வங்கி இணைய தளத்தை பார்க்கவும்.
 
ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02 -22602201, 22602944 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்