காப்பிக் கொட்டை ஏற்றுமதி 60% உயர்வு

வெள்ளி, 1 அக்டோபர் 2010 (14:00 IST)
இந்தியாவின் காப்பிக் கொட்டை ஏற்றுமதி 2009-10 பயிர் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 60 விழுக்காடு அதிகரித்து 2,71,859 டன்களாக உயர்ந்துள்ளது என்று இந்திய காப்பி வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த பயிராண்டில் இந்தியாவின் காப்பிக் கொட்டை ஏற்றுமதி 1.78 இலட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. அது இந்த ஆண்டு 2,71,859 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. ஆனால் ஏற்றுமதிக்குக் கிடைத்த விலை குறைந்துள்ளது.

ஏற்றுமதி 60 விழுக்காடு உயர்ந்தாலும், அதனால் கிடைத்த வருவாய் 43 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் காப்பி ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,954.37 ஆகும். இந்த ஆண்டில் ஏற்றுமதி வருவாய் ரூ.2,787 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் காப்பி உற்பத்தி அக்டோபர் முதல் செப்டம்பர் வரையில் நடைபெறுகிறது. 2009-10ஆம் பயிராண்டில் இந்தியாவின் காப்பி உற்பத்தி 2.89 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதில் 2.72 இலட்சம் டன் ஏற்றுமதியாகியுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாதான் மிகப் பெரிய காப்பிக் கொட்டை ஏற்றுமதி நாடாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்