உதவி வேளாண் அதிகாரி நியமனத்துக்கு தடை

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (12:22 IST)
தமிழகத்தில் 1,707 உதவி வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மை மற்றும் தோட்டக்கலை டிப்ளமோ பட்டதாரிகள் 19 பேர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தனர்.

மனுவில், நாங்கள் வேளாண்மை தோட்டக்கலை டிப்ளமோ முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இப்போது 1,707 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உத்தரவிட வேண்டும். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் இதில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. வெங்கட்ராமன், உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனு மீதான அடுத்த விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்