செப். 25, 26இல் 3ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு

புதன், 23 செப்டம்பர் 2009 (12:24 IST)
மருத்துவப் படிப்புகளுக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 25, 26ஆம் தேதிகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் அறிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள், மதுராந்தகம் அருகே கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மறுஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னையில் 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களில் காலி இடங்கள் ஏதும் இல்லை. சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பி.டி.எஸ். இடங்களும் கலந்தாய்வின் போது நிரப்பப்படும்.

சென்னையில் நடைபெறும் 3ஆம் கட்ட கலந்தாய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே மாறுதல் கோருவோருக்கு விதிகளின்படி மறுஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்