இந்திய மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்கியது இங்கி.

வியாழன், 11 பிப்ரவரி 2010 (16:00 IST)
இங்கிலாந்தில் படிப்பதற்காக செல்லும் அயல்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாற்றைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட அயல்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான விதிமுறைகளை இங்கிலாந்து அரசு கடுமையாக்கி உள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து உள்துறை செயலர் ஆலன் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐரோப்பிய யூனியன் தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை உள்ளிட்ட தேர்வுகள் கடுமையாக்கப்படும்.

பட்டப்படிப்புக்கு கீழுள்ள படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும். 6 மாதத்திற்கு குறைவான காலகட்டம் கொண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் தங்களுடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதேபோல், பட்டப்படிப்புக்குக் கீழுள்ளவற்றை தேர்வு செய்யும் மாணவர்களுடன் இங்கிலாந்து வருபவர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாட்டு மாணவர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாகப் பயில அனுமதி அளிக்கப்படும் அதேவேளையில் சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் பணியாற்ற அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ள ஆலன், கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட கடுமையான விசா விதிமுறைகளை தொடர இன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.

ஆனால் இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாவதற்கு முன்பாகவே வடஇந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய பகுதிகளில் இருந்து இங்கிலாந்துக்கு கல்வி பயில விசா கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்