''நமது வீர விளையாட்டுகள் எல்லாம் மறைந்து, இப்போது தெருவெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சூதாட்ட விளையாட்டான கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம் என்று கடந்த 13 ஆம் தேதி சென்னையில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு பேசியுள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.
சூதாட்ட விளையாட்டான கிரிக்கெட்டை’ என்று இராமதாஸ் வர்ணித்திருப்பது மிகவும் தவறானது, அந்த விளையாட்டைப் பற்றி அறியாமல் பேசுவதாகும்.
கிரிக்கெட் விளையாட்டு தன்னவில் ஒரு சிறந்த நேர்த்தியான விளையாட்டே. பண்பாளர்கள் விளையாட்டு (Gentlemen Game) என்று கூட கூறுவதுண்டு. அந்த விளையாட்டை வைத்து சூதாடுபவர்கள்தான் கண்டனத்திற்குள்ளாக்கப்பட வேண்டியவர்களே தவிர, அதையே காரணமாக்கி கிரிக்கெட் விளையாட்டை சூதாட்ட விளையாட்டு என்று கூறுவது எவ்வாறு நியாயமாகும்?
கிரிக்கெட் விளையாட்டிற்கு மருத்துவர் இராமதாஸ் கையாண்ட அதே அளவு கோலைக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சமீப கால அரசியல் அளவிட்டால் அதையும் சூதாட்டம் என்று எண்ணத்தோன்றாதா?
மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைப்போவதை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு மாநிலங்களவை இடம் கேட்டு கட்சியின் தலைவர் ஜி.கே.மணியை கருணாநிதியிடம் தூதுவிட்டு பார்த்தார் இராமதாஸ். பதவிக்காக தூது விடுவது, அவர்களுக்கு ஆதரவாக பேசுவதும் ஒரு சூதாட்டம் தானே?
WD
முடிவில் நேர்ந்தது, கூட்டணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்வது என்றும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி 2011க்குப் பிறகு பா.ம.க.வுக்குத் தரப்படும் என்றும் கூறி, பா.ம.க.வுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது தி.மு.க.
அரசியல் என்பதும் மக்களின் நலன் காக்க செய்யப்படுவதுதானே? ஆனால் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ஊழல் செய்வதில் இருந்து சொத்து சேர்ப்பது வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையா என்ன? மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றாமல் ஊழலில் ஈடுபடுவதும், எதிர்த்தவர்களுடனேயே கூட்டு சேர்வதும், அதிக இடங்களுக்காக கூட்டணி மாறுவது என்பதும் சூதாட்டம்தானே? அதை வைத்து அரசியலை சூதாட்டத்தின் மறு வடிவம் என்று கூற முடியுமா? அவ்வாறு கூறுவது எப்படி பொறுத்தமற்றதோ அதேபோல் கிரிக்கெட்டை சூதாட்ட விளையாட்டு என்று கூறுவதும் பொறுத்தமற்றது, நியாயமற்றதே.