வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

vinoth

சனி, 28 செப்டம்பர் 2024 (07:48 IST)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியை புலிவேஷம் அணிந்து வந்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் ரசிகரான டைகர் ராபியை சிலர் தாக்கியுள்ளனர். அவர் சி பிளாக்கில் இருந்து வங்கதேசக் கொடியை ஆட்டியபடி, வங்கதேச அணிக்கு ஆதரவாக சில கோஷங்களை எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அவரோடு சில ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் கையில் வைத்திருந்த வங்கதேசக் கொடியை பிடுங்கி எறிந்துவிட்டு அவரைத் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின.  அவரை போலீஸார் கும்பலிடம் இருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது டைகர் ராபி இந்திய ரசிகர்களால் தாக்கப்படவில்லை என்றும், அவர் உடலில் நீரிழப்புக் காரணமாக மயங்கி விழுந்ததாக கல்யாண்பூர் ஏசிபி அபிஷேக் பாண்டே தெரிவித்துள்ளார். ஆனால் டைகர் ராபி சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் அவர் தாக்கப்பட்டார் என்பதை தெளிவாகக் காட்டுவது போல உள்ளதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்